தை மகளே
தை மகளே
தை மகளே! - உன் வருகையோ
எட்டுத்திக்கும் தேனைப்போல் தித்திக்கும்
மகிழ்ச்சியோ வானைப்போல் பரவும்
நீ வருகையில் - என்ன
கொண்டு வந்திருக்கிறாய் தை மகளே!
மார்கழியின் கடைநாள் போகியில்
முன்னாள் கவலைகளைப் போக்கி - மகிழ்ச்சியை
முழுவதுமாக நாடெங்கும் நிரப்ப
நீ வருகிறாய் - எனும் இன்பச் செய்தியோ?
தைத்திருநாளாம் உழவர் திருநாளில்
பலபடைக்குப் பசியாற்றத் தேவையான நெற்கதிரின்
அறுவடைக்கு நேரம் வந்துவிட்டது
எனும் இன்பச் செய்தியோ?
உயிர் வளர பயிர் வளரச்செய்ய
உதவிய சுடும் சூரியனுக்கு
உழவர்கள் நன்றி பாராட்ட வேண்டும்
எனும் இன்பச் செய்தியோ?
ஏர்பூட்டி எந்நாளும் - உழவர்க்கு
உழுது உதவிய மாடுகளின்
உழைப்பைப் பாட வேண்டும்
எனும் இன்பச் செய்தியோ?
கண்யெட்டா தூரத்தில் வாழ்ந்தாலும் - நம்
பண்பட்ட பண்பாடு வீழாமல்
அன்புசேர்த்து விருந்தோம்பல் வளர்க்க வேண்டும்
எனும் இன்பச் செய்தியோ?
புரிந்துகொண்டேன் தைமகளே
தீமைத்தூற்று நன்மைப்போற்று ;
பசிப்பிணி களை மனநிறைவு விளை ;
நன்றி மறவாமல் - பிறர்
உழைப்பை மறைக்காமல் போற்றி
அன்பை வளர் - என்று
நீ கொண்டு வந்திருக்கிற அழகிய செய்தியை!