நீயே என் ஜீவனடி 18
நீயே என் ஜீவனடி 18
" தாயி... தாயி.... எழுந்துருத்தா... விளக்கு வச்சதுக்கு அப்புறம் தூங்க கூடாதுன்னு சொல்லுவாங்க ..." என மயில் அம்மாவின் குரல் கேட்க கண்விழித்தாள், ஆனந்தி.
கண்களை கசக்கியபடி மணியை பார்க்க அதிர்ந்தாள். மணி ஆறை தாண்டி சென்று கொண்டிருந்தது.
'ஐயோ... ஆனந்தி... இப்படி பண்ணிட்டியே டி. உன் மிஷன் என்ன ஆகுறது. இந்நேரம் ஆரு வீட்ல இருக்கானான்னு கூட தெரியல.
இந்த பிரியாணி சாப்பிட்டா மட்டும் எங்க இருந்து தான் தூக்கம் வருவதோ தெரியல. அப்படி ஒரு தூக்கம் வருது.
ஆரு எங்கேயும் போயிடாத டா....'
என வேக வேகமாக முகம் கழுவி விட்டு கீழே இறங்கி வந்தாள்.
மயிலம்மா ஆனந்தியின் கையில் டீயை கொடுக்க அதை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்.
அரவிந்தை எங்கும் காணவில்லை. வாயிலில் நின்றிருந்த சேகரை பார்க்க அவன் உள்ளே வந்தான்.
" அண்ணி, அண்ணே கொஞ்சம் வெளிய போயிருக்காங்க. உங்ககிட்ட சொல்ல சொல்லிட்டு போக தான் வந்தாங்க. நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்களா, அதான் என் கிட்ட சொல்ல சொல்லிட்டு போயிருக்காங்க.
அண்ணே வர கொஞ்சம் லேட் ஆகுமாம். நீங்க சீக்கிரம் சாப்பிட்டு டாக்டர் கொடுத்த மாத்திரையையும் சாப்பிட்டு படுத்துக்குவிங்களாம்." என சொல்ல தலையை மட்டும் ஆட்டிவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.
'என்ன ஆனந்தி இப்படி பண்ணிட்ட. இப்போ உனக்கு தூக்கம் தான் முக்கியமா.
இவன் எப்போ வந்து எப்போ சாவி வாங்கி எப்போ அவன் ரூம் செக் பண்றது. மொத்தமாக சொதப்பிட்டியே டி.' தன்னைத்தானே நொந்து கொண்டு டீயை குடித்து முடித்தாள்.
அரவிந்தின் வருகைக்காக ஹாலில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்க, அவன் வருவதாக இல்லை.
மணி எட்டை அடைய போகும் போது வயிறு பசிக்கவும் சாப்பிட்டு வந்தவள் சோபாவில் சரிந்தாள்.
எப்பொழுது வருவான் என வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.
தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் ஹாலில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் தேவதையை பார்த்தவன், அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.
" ஆனந்தி" என மென்மையாக அழைக்க,
இதழில் புன்முறுவலுடன், "ஆரு குட்டி எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா..." என்றால் தூக்கக்கலக்கத்தில்.
தூக்கத்தில் தன்னவள் தன்னை விரும்புவதையும் அறிந்தவன், அவள் தலையை கோதி,
" ஆனந்தி, எழுந்திருமா.... நீ ஹால்ல படுத்து இருக்க..." என கூற, பதிலுக்கு அவன் கைகளை எடுத்து தலைக்கு அடியில் இருந்த அவள் கைகளுக்குள் சிறை பிடித்துக் கொண்டாள்.
கையை உறுவ நினைக்க, அவள் விடுவதாக இல்லை.
அவளுக்குள்ளேயே சிறையுண்டு இருக்கட்டும் என நினைத்தவன் தரையில் அமர்ந்து தன் தேவதையை தரிசித்துக் கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் அவள் திரும்பி படுக்க தன் கையை லாவகமாக எடுத்தவன் அவளை பூப்போல் ஏந்தினான்.
அவனின் திருமணமும், அன்று முரண்டு பிடித்த ஆனந்தியும் கண் முன் வர, ஆனந்தியின் தற்போதைய முன்னேற்றத்தை கண்டு மனம் மகிழ்ந்து கொண்டான்.
அவளை அவள் அறையில் படுக்க வைத்து விட்டு அவள் தலையை மென்மையாக கோதி நெற்றியில் இதழ் பதிக்க சென்றவன் என்ன நினைத்தானோ அவள் நெற்றியில் தன் நெற்றியை லேசாக முட்டி விட்டு எழுந்தவன், அவளை ஒரு நிமிடம் ஆராய்ந்து போர்வையை போர்த்தி விட்டு நகர்ந்தான்.
அவனுடைய கட்டிலுக்கு எதிரே இருந்த புகைப்படத்தை பார்த்ததும் தன் மனதில் இருந்ததை பகிர்ந்து விட்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவன் அமைதியைக் கலைக்கும் விதமாக அவன் அலைபேசி சிணுங்க அதற்கு அனுமதி அளித்தான்.
வழக்கறிஞரிடம் அலைபேசியில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, அவன் அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்டது.
பேசிக்கொண்டே அறைக்கதவை திறக்க, அறையின் வெளியில் கையில் பாலுடன் நின்றிருந்தாள், ஆனந்தி.
ஆனந்தியை அங்கே சற்றும் எதிர்பாராதவன் பின் நிதானித்து அறையின் கதவை மூடினான்.
வழக்கறிஞரிடம் பிறகு பேசுவதாய் கூறி இணைப்பை துண்டித்தான்.
"ஆனந்தி, இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற. நீ தூங்கிட்டுல இருந்த."
அவன் கேட்ட கேள்வியில் அவள் முறைக்க,
" என்னாச்சு ஆனந்திமா..…"
"ஏன் இவ்வளவு லேட்டு. நான் உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுனேன் தெரியுமாடா..."
" நான் தான் வர லேட் ஆகும்னு சொன்னேனேமா...."
" பரவாயில்லை நீ டின்னர் சாப்டியா...?"
" நான் சாப்பிட்டேன்."
" சரி உள்ள வா இந்த பால் குடிச்சிட்டு படு." என அறையின் கதவில் கை வைக்க, அவள் கைகளைப் பற்றினான், அரவிந்த்.
" பரவாயில்லை ஆனந்தி. இங்கேயே குடு. நான் குடிச்சுக்குறேன்."
" என்ன ஆரு நீ. உள்ள போய் ரிலாக்ஸா உட்கார்ந்து குடி. வா போலாம்."
' நீ எதுக்கு உள்ள வர துடிக்கிறேன்னு எனக்கு தெரியாது. நம்ம ரூம்ல வேவு பார்க்க வரேன் ன்னு சொல்ற.' என நினைத்தவன் உதட்டில் புன்னகை எட்டிப்பார்க்க,
" இல்ல ஆனந்தி. லேட் ஆச்சு. நீ என் கையில் கொடுத்துட்டு போய் படு."
அவனது அறையை ஏக்கமான பார்வை பார்த்துவிட்டு,
" ஏன் ஆரு நான் உன் ரூம்குள்ள வரக்கூடாதா...?"
அவளின் கேள்விக்கு சிரித்தவன்,
" இதுதான் ஆனந்தி பிரச்சனை. இது என் ரூம் இல்ல. நம்ம ரூம். இத நீ புரிஞ்சுக்கணும்.
இந்த ரூமுக்குள்ள வர்றதுக்கு உனக்கு முழு உரிமை இருக்கு.
ஆனா அந்த உரிமையை நீ புரிஞ்சுகிட்டு, உணர்ந்திட்டு முழுசா அதை ஏத்துக்குட்டு வரணும்னு நான் ஆசைப்படுகிறேன்.
இப்போ நீ என்னை உன் கணவனா நீ ஏத்துக்க முயற்சி மட்டும் தான் செய்ற.
எப்போ நீ என்னை முழுசா ஏத்துட்டு என்கூட உன்னையும் உன் வாழ்க்கையையும் பகிர்ந்துக்குற நினைக்கிறயோ அப்போ நீ உரிமையா இந்த ரூமுக்கு உள்ள வரலாம்.
அது இந்த நிமிஷமா இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான்." என்றவன் நகர்ந்து,
" நான் சொன்னதை ஏத்துகிட்டா நீ தாராளமா நம்ம ரூமுக்கு உள்ளே போலாம்." என செக் வைத்தான்.
' என்னது என் வாழ்க்கையையும் என்னையுமா..... நான் தூக்கத்திலிருந்து சிஐடி வேலை பார்க்க அரக்கப் பறக்க ஓடி வந்தா,
இதுதான் சாக்குன்னு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்றியா....
இதெல்லாம் என்கிட்ட செல்லாது...'
"ஆனந்தி மா .... என்ன ஆச்சு.. உள்ளே போகலையா....?" என குறும்புடன் அரவிந்த் கேட்க,
" அது ... அது.... இந்தா இந்த பாலை பிடி. இப்போ ஒன்னும் அவசரம் இல்ல ஆரு. நான் இன்னொரு நாள் வரேன். " என பாலை அவன் கையில் திணித்து விட்டு
'விட்டா அவனே பிடிச்சு உள்ள
தள்ளிருவான் போல.' என எண்ணியவாறே அவள் அறையை நோக்கி ஓடினாள்.
" ஆனந்தி பார்த்து போ..." என அவள் ஓடுவதைப் பார்த்தவன், அவள் அறைக்குள் சென்று கதவை சாத்தியதும், புன்னகையுடன் பாலை குடித்துக்கொண்டே அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.