சான்றோர்கள்
சான்றோர்கள்
ராமானுஜர் திருமலைக்குப் போனபோது, அவரை வரவேற்கத் திருமலை நம்பிகள் வந்தார். `திருமலை ஆதிசேடனின் வடிவம்’ என்று கருதியதால், ஆழ்வார்கள் எவரும் கால்வைத்து ஏறாத மலையில், தான் கால்வைத்து நடத்தல் தகாது என்று தவழ்ந்து சென்று திருமலை நம்பி எதிர்கொண்டு வரவேற்றார். ராமாநுஜரும் பாதம் படாமல், முழங்காலால் நடந்து சென்று, தன்னை வரவேற்க வந்த திருமலை நம்பியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.
``என்னை எதிர்கொண்டு வரவேற்க, தாங்கள் இவ்வளவு தூரம் வர வேண்டுமா... யாரேனும் சிறியவரை அனுப்பி வைக்கலாகாதா?’’ என்று பணிவு ததும்பக் கேட்டார் ராமானுஜர்.
``அப்பனே… நானும் தேடிப் பார்த்தேன். என்னைவிடச் சிறியவன் எங்கும் தென்படவில்லை. எனவேதான், இந்தச் சிறியவனே வரவேண்டி நேர்ந்தது’’ என்று திருவாய் மலர்ந்தார் திருமலை நம்பி. சான்றோர்கள், அடக்கத்தின் திருவுருவமாக இருப்பவர்கள். மணிவாசகப் பெருமான் தாம் இயற்றிய திருவாசகத்தில் `நாயினும் கடையேன்’ என்று தன்னைத் தாழ்த்திக்கொள்வார்.