அலைக்கதை
அலைக்கதை
பரந்த கடலில்விரிந்த அலையொன்
றுயர்ந்து மேகம் பார்த்து வியந்தது!
அந்தி ஞாயிறின் சுந்தரம் பார்த்து
அழகை வியந்தது!
மயக்கும் மாலைக் கதிரவன் ஔியை
மின்னும் அணியாய் மேனியி்ல் கொண்டு
தென்றல் தழுவ தேன்மழைச் சாரலில்
இன்பச் சந்தம் இசைத்துக் கொண்டு
துள்ளும் மீன்களை
உள்ளே கொண்டு
ஆடி ஓடித் தாவி வந்தது!
முன்னே செல்லும் மற்றொரு அலையோ
முகத்தில் சோகம் முழுவதும் பூசி
அகத்தில் இன்பம் அறவே இன்றி
அடிமே லடியாய்மெதுவே ஊர்ந்தது!
அதனைக் கண்ட நற்பெரும் பின்னலை
நண்பா ஏனுந்தன் நன்முகச் சோகம்?
என்றே வினவ,
சோக முன்னலை,
முன்பார் நண்பா!
எல்லா அலைகளும்
எதிர்கொள் கரையினில்
எப்படிச் சிதறுது என்றே நீபார்!
வாழ்வே முடியும் நேரம் வந்தால்
வருமா மகிழ்வு?வாய்திற நண்பா!
என்றே எதிர்த்துமுன்னலை கேட்க
நன்றாய்ப் பின்னலை நல்கிய தோர்பதில்!
அலையென நினைத்தால் அகலும் வாழ்வு!
கடலென உனைநினை! காலம் முழுதும்
அழியா நிலையில் அற்புதம் காண்பாய்!
முழுமையின் மகத்துவம் முழுதாய் உணர்வாய்!