கிளி கோபுரம்
கிளி கோபுரம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோவிலில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயத்தின் சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
அருணகிரிநாதர்
சிற்றின்பத்தை பெரிதாக எண்ணி வாழ்ந்து வந்த அருணகிரிநாதர், ஒரு கட்டத்தில் வாழ்வில் மனமுடைந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம், திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள வல்லாள மகாராஜ கோபுரம். அந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தார். ஆனால் அவரை முருகப்பெருமான் காத்து அருளினார். மேலும் அவருக்கு சிறந்த புலமையை வழங்கினார். ‘முக்தைத்தரு..’ என அடியெடுத்துக் கொடுத்து, திருப்புகழைப் பாட அருள்புரிந்தார்.
ஒரு முறை வல்லாள மகாராஜனின் கண்நோய் தீர, இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத மலர் தேவைப்பட்டது. அதைக் கொண்டு வர அருணகிரிநாதர் முடிவு செய்தார். மனித உடலோடு செல்லமுடியாது என்பதால், கூடு விட்டுக் கூடு பாயும் சித்தியை கையாண்டு, இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரை செலுத்தினார். அருணகிரிநாதரின் உடல் ஓரிடத்தில் மறைவாக இருந்தது. இதற்கிடையில் அருணகிரிநாதரின் மீது பொறாமை கொண்டிருந்த, சம்பந்தாண்டன் என்பவர், அவரது உடலை எரித்து விட்டான். திரும்பி வந்த அருணகிரிநாதர் தன் உடலைக் காணாது கவலையுற்றார். பின்னர் கிளி உடலில் இருந்தபடியே கந்தரனுபூதி பாடினார். திருவண்ணாமலை ஆலயத்தில் அருணகிரிநாதரின் நினைவாக கிளி கோபுரமும், அதன் மேல் கிளியின் உருவமும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.