மனிதநேயம் சாகவில்லை
மனிதநேயம் சாகவில்லை
இன்னும் மனிதநேயம் சாகவில்லை என்பதற்கு ஒரு சான்று
ஈரோடு திண்டல்மலை அருகில் Little Sisters என்ற ஆதரவற்ற முதியோர் காப்பகம் ஏறத்தாழ 75 வயதுக்கு மேல் உள்ள சுமார் 100 வயதானவர்களை வைத்து சிறப்பாக அந்த இல்லத்தை கிருத்துவ மதத்தின் சகோதரிகள் நடத்திக் கொண்டு உள்ளார்கள். இந்த இல்லத்தில் இருக்கக்கூடிய 10 பெரியவர்களுக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் உணர்வுகள் அமைப்பின் மூலமாக கடந்த 3 நாட்களாக உணவு கொடுத்து வந்துள்ளோம். இன்றும் அப்படித்தான் அங்கு உணவு கொடுப்பதற்காக நான் மற்றும் எங்கள் உணர்வுகளின் நண்பர்களோடு சென்றோம். உணவு கொடுத்து விட்டு திரும்பும் பொழுது ஒரு சிஸ்டர் அங்கு இருந்து வந்து இன்று காலை உடல்நிலை முடியாமல் இருந்த 75 வயதான இந்து மதத்தைச் சார்ந்த ஆதரவற்ற திருமதி.ஆண்டாள் அம்மாள் என்ற பெண்மணி இறந்து விட்டார், அவர்களுக்கு யாரும் உறவினர்கள் இல்லை அவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறினார். அப்பொழுது எங்களுடைய கண்களில் நீர் ததும்ப நின்றுகொண்டிருந்தது. பிறகு அவர் சொன்ன செய்திதான் மிக அதிர்ச்சியாக இருந்தது, எங்கள் இல்லத்தில் தற்போது எந்த ஆண்களும் இல்லை நாங்கள் பெண்கள் மட்டுமே இருக்கின்றோம் எவ்வாறு அவர்களை எடுத்து அடக்கம் செய்வது என்று தெரியவில்லை, நீங்கள் உதவி செய்ய முடியுமா? என்று சொன்னவுடன் அனைவருடைய கண்களிலும் கண்ணீர் குளமாக மாறியது. இந்த செய்தியை காலையே தெரிந்திருந்த ஈரோடு மாநகராட்சியின் ஆணையாளர் மரியாதைக்குரிய Dr.இளங்கோவன் அவர்கள் அந்த அம்மையாரை சுடுகாட்டில் எரியூட்டுவதற்கு நேரம் வாங்கிக் கொடுத்து மனிதாபிமானத்தோடு சில உதவிகளை செய்து கொடுத்திருந்தார்* என்று அந்த சகோதரிகள் சொன்ன பொழுது அவரை நாங்கள் மனதார பாராட்டினோம்.
இதை தாண்டி இப்பொழுது அந்த பெண்மணியை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவேண்டும்... என்ன செய்யலாம் என்று யோசித்தபோது.... தங்களது இடைவிடாத பணியின் மூலமாக இதுவரை ஏறத்தாழ 120 Corona நோயாளிகளை அரசு வழிகாட்டுதலோடு அடக்கம் செய்து கொண்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகியும், இந்த உன்னதமான பணியை தலைமை ஏற்று நடத்தக்கூடிய திரு.பாட்ஷா அவர்களை தொடர்பு கொள்வதற்காக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் அன்பு சகோதரர் திரு.லுக்மான்.,அவர்களை தொடர்பு கொண்டவுடன் கட்டாயமாக அம்மையாரை அடக்கம் செய்வதற்கு நாங்கள் உதவி செய்கின்றோம் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று சொல்லி மிகச் சரியான நேரத்திற்கு வருகை தந்து அரசு வழிகாட்டுதலோடு தங்கள் சொந்த செலவிலேயே கவச உடைகளை போட்டுக்கொண்டு அந்த அம்மையாரை சுடு காட்டிற்கு எடுத்துச் செல்லும் பொழுது மனித நேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு சான்றாக நாங்கள் அங்கிருந்து அழுதுகொண்டே அம்மையாருக்கு பிரியாவிடை கொடுத்தோம்.
இதில் மனித நேயத்திற்கு சான்று என்னவென்றால் ?..
இறந்த அம்மையார் இந்து மதத்தைச் சார்ந்தவர்*, அவரை இவ்வளவு ஆண்டுகள் பேணிப் பாதுகாத்து உணவுகளை வழங்கி, சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தவர்கள் கிருத்துவ மதத்தைச் சார்ந்தவர்கள்* தற்பொழுது அம்மையாரை அடக்கம் செய்ய உதவியவர்கள் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள்.
நண்பர்களே இப்பொழுது புரிந்திருக்கும்... இன்னும் மனிதநேயம் சாகவில்லை என்று. மதம் அனைவரையும் என்றுமே ஒன்று சேர்த்தும் என்பதற்கு இது ஒரு சான்று.