அநீதியை எதிர்க்கும் துணிவு
அநீதியை எதிர்க்கும் துணிவு
அநீதியை எதிர்க்கும் துணிவு
- சேயோன் ஜெயமுரளி
எதிர்க்கும் துணிவு வேண்டும் - அநீதியை
எதிர்க்கும் துணிவு வேண்டும்...
"பாரதி சின்னப்பயல்" என்றுரைத்த - அந்தப்
பாவலரின் பாங்கான பேதத்தை;
"பாவம் அவளுக்கென்ன தெரியும்அவள் - சின்னப்
பெண்தானே...!!" என்றிழுக்கும் ஏளனத்தை;
"சிவப்பாய் இருக்கிறவன் பொய்சொல்ல - மாட்டான்"
சித்தத்தில் ஊறுமிந்தக் கற்பிதத்தை;
"கருப்பாய் இருந்தாலும் களையாத்தான் - இருக்க..."
கணக்காக அழுந்துமந்த 'உம்'மையினை.
புதிதாகச் சேரவரும் அலுவலரைக் - காணப்
பேராவல் கொண்டிருக்கும் உள்ளத்தில்,
புதிதாக வருபவரோ பெண்ணென்றால் - தோன்றும்
பொதுவான இளக்காரப் பார்வையினை;
மிடுக்கான பெண்ணவளின் ஆளுமையைக் - கண்டு
மிரட்சியுறும் மாந்தர்தம் மனத்துள்ளே,
துடுக்கான பெண்ணென்றும் திமிர்க்காரி - என்றும்
திடமாகக் கொள்ளும்கண் ணோட்டத்தை.
தோற்றத்தை நுண்ணோக்கி மானிடரின் - சமயச்
சாதியினை ஆராயும் முடமதியை;
ஏற்றத்தைச் சாதியொடு கணக்கிட்டு - இங்கே
ஏற்படுத்தி வைத்திருக்கும் படிநிலையை;
அதிகாரம் உள்ளவரைப் பணிந்தேத்தி - மற்ற
அலுவலரைக் கீழென்னும் மனநிலையை;
கதியற்ற உழைப்பாளர் உழைப்பதனைச் - சற்றும்
கனிவின்றிச் சுரண்டுகிற கொடுமையினை.
வசதியில் நிறைந்தவரைச் "சாப்பிட்டாச்சா? - முதலில்
பந்தியிலே அமருங்க" என்பதற்கும்
வசதியில் குறைந்தவரை நயமாகக் - "கொஞ்சம்
பாத்திரங்கள் விளக்கித்தா" என்பதற்கும்
இடையிலே இறுகிநிற்கும் வேறுபாட்டை - அதிலே
இழையோடும் சமூகத்தின் வக்கிரத்தை;
கடைநிலை மனிதர்களைக் கடைசியிலே - வைக்கும்
கயமைக்கு விலைபோகும் கேவலத்தை.
கணந்தோறும் உழைப்பதனால், தொண்டுகளால் - பயிலும்
கல்வியினால் பலகொடைகள் ஈந்தாலும்,
பணம்பொருளாய்த் தரும்கொடையே கொடையாகப் - புகழும்
பழுதாகிப் போனதொரு பண்பாட்டை;
மதிப்பிங்கே யாவருக்கும் சமமாகும் - அன்றி
மதம்சாதிப் பொருள்பதவிச் செல்வாக்கு
அதிகாரம் எனப்பார்த்து மரியாதை - செய்யும்
ஆகமிக இழிந்ததோர் அநீதியை...
எதிர்க்கும் துணிவு வேண்டும் - எந்த
அநீதியும் எதிர்க்கும் துணிவு வேண்டும்.