கருமை... கருப்பை..
கருமை... கருப்பை..
கரிசல் மண்ணைக்
காண்கிற கண்களில்
கருமை வண்ண
களி மண்ணும்,
நனைந்த மண்ணில்
புதையும் காலும்,
காயும் போது
மண்ணின் பரப்பில்
பரவிடும் விரிசலும்
மட்டுமே தெரியுமேயன்றி
கருமை நிற மண்ணின்
அருமையையும்
மகத்துவத்தையும்
அறிந்து உணர்ந்த
உழைக்கும் உழவனே
உலகில் தோன்றிய
முதல் முதலாளி...
மண்ணில் விதை விதைத்து
பயிர் வளர நீர் இறைத்து..
ஓருயிர் தொடங்கி
ஆருயிர் வரைக்குமான
உலகத்து உயிர்கட்கெல்லாம்
உண்ணும் உணவை
உற்பத்தி செய்யும்
உழவர் பெருமக்கள்
உயிர் போல் மதித்து..
விதைக்கும் விதைக்கு
தாயின் கருப்பையாகி
புதைத்த விதையை
மரஞ்செடிக் கொடியாக்கி
பல்லுயிர் பசியையும் போக்கிடும் பல்வகை தானிய மணிகளையும்..
ரசித்துப் புசித்திட காய்கறிகளையும்
சுவைமிகு சாறுநிறை கனிகளையும்
விளைவித்து கொடையளித்தல் கருணைமிகு கருமண்ணின் கரிசனம் மிகுந்த தனிக் குணமே
மண்ணில் விழும் மழைத்துளிகள் திரண்டு உருண்டோடிய
தண்ணீர் ஏரி குளங்களிலும் கிணறுகளிலும் தவமிருந்து...
மண்ணின் நெஞ்சு வெயிலில் வெடிக்காமலிருக்க ஈரமளிக்கும்..
பயிர்களின் உயிர்காக்கும்
வேர்களுக்கு நீரளிக்கும்...
மின்னும் வைரத்தை பிரசவிப்பது
கரியென்னும் உண்மையை
நம்புதல் சற்றே கடினமாயினும்..
உண்ணும் உணவில் பலவும்
உடுத்தும் உடையின் நூலும்
உறையும் வீட்டின் பாகங்களும்
கரிசல் மண்ணின் கருவினில்
பிறந்து வளர்ந்ததை அறிந்து
கரிசல் மண்ணின்
அருமை உணர்ந்து
பெருமை புரிந்து
கார்மேக வண்ண கரிசல்
மண்ணை போற்றுவோம்..
இரா.பெரியசாமி..