குருவே துணை!
குருவே துணை!
ஓடியாடி விளையாடி....
உண்டு உறங்கி களிப்புற்று....
உற்றார் உறவினரோடு குலவி...
சுதந்திரமா ய் திரிந்த என்னை....
கையில் சிலேட்டும்...
கலர் கலராய் பல்பமும்...
அரிச்சுவடி அட்டையும் வைத்து....
கையில் ஆரஞ்சு மிட்டாய் கவரை கொடுத்து... அழைத்து வந்தனர்!
தயங்கி... மயங்கி... மெல்ல காலடி
எடுத்து வைத்தேன் பள்ளிக்கு!
குரு மந்திரம் சொல்லி துணையாக நான் இருப்பேன்! என்று வாக்களித்தீர்...
நீர் என்னுடன் இந்நாள் வரையில் இருக்கிறீர்!
என் வாழ்நாள் முழுவதும் நீர் கற்றுக் கொடுத்த கல்வி துணையிருக்கிறது!
உம் குரல்வளை நைந்து போகும் மட்டும் கற்பித்தீர்!
உம் வித்தைகளை யெல்லாம் கற்றுக் கொடுத்தீர்!
கால நேரம் கண்டதில்லை!
கணக்கு பார்த்து கற்பித்ததில்லை!
அப்போது எனக்கு தெரியாது!
நீர் அடித்த அடி....
என்னை நேராக்க!
நீர் திருகிய திருகு...
என் புத்தியை சீராக்க!
நீர் முறைத்த முறை...
என் பழக்கவழக்கங்களை ஒழுங்காக்க!
நீர் பாடிய வசவுகள்...
என் புகழ் பாட!
ஆம்....
என் மனமென்னும் தோட்டத்தில் கல்வி என்னும் விதை ஊன்றி....
கருத்தோடு வளர்த்தீர்!
விளைச்சலில் பங்கு கேட்டதில்லை!
விளைச்சல் கண்டு வியப்புற்றதில்லை!
களிமண்ணாய் காட்சியளித்த என்னை...
கணக்காய் நல் பாத்திரமாக்கினீர்!
கணக்கு பேச வரவில்லை....!
கரித்துண்டாய் காட்சியளித்த என்னை....
பட்டைத் தீட்டி நல் வைரமாக மாற்றினீர்!
என்னால்! என்று மார் தட்டிக் கொள்ள வில்லை!
மாண்புகள் எதுவும் பேசவில்லை!
கஷ்டப்பட்டோர்.... படாதோர்... எல்லாம் உரிமை கொண்டாட....
எனக்காக கஷ்டப்பட்ட நீர் இதுவரை உரிமை கொண்டாடி பேசியதில்லை!
உனக்காக எதுவும் நான் செய்ததில்லை!
நான் வாழ்வில் வளம் பெற வேண்டும் என உளமாற எண்ணியவர் நீர்!
கள்ளம் கபடமின்றி உழைத்தவர் நீர்!
நான் பிழைத்துக் கொள்ள வழி வகுத்தவர் நீர்!
ஆசிரியர் ஆசு+ இரியர்
குற்றமற்றவர்களே...
உம் உள்ளத் தூய்மையை எண்ணி உவகை கொள்கிறேன்!
கைம்மாறு கருதாது உழைத்திட்ட
உன்னதம் மிக்க ஆசான்களே!
என்னை ஏற்றி விட்ட ஏணிகளே.... !
அளப்பரியது உம் பணிகள்!
இவ்வுலகில் எல்லாம் எனை விட்டு நீங்கினாலும்....
என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் வருவது.... நீர் கொடுத்த செல்வம் மட்டுமே!
அறிவோம் நன்றாக....
குரு வாழ்க! குருவே துணை!
ஆம்....நீரே துணை!
நீர் கற்றுக் கொடுத்த கல்வியே துணை!
உம் வாக்கு என்றும் பொய்த்ததில்லை!
என் உயிர் உள்ள வரை உம் பாதக் கமலங்களுக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐