தீப ஒளி
தீப ஒளி
வலியில்லாத வாழ்க்கை இல்லை
வளியில்லாமல் வாழ்வே இல்லை
அழகான தீப ஒளி கொண்டு
தீபாவளியை வரவேற்போம்!
மாசிலிருந்து வளியை காப்போம்!
பசுமையால் உலகை நிறைப்போம்! மண்ணில் 'பட்' 'பட்' ஒலி
காதை பிளக்கலாம்!
பட்டொளி வர்ண ஜாலமாய்
விண்ணில் ஒளிரலாம்!
காசை கரியாக்கி
(கரியால் )
வளியை மாசாக்கி
வளியை வாங்கி
வலிக்க வலிக்க
முதுகில் சுமந்து
இயற்கை தந்த
இலவசங்களை
காலமெல்லாம் தூக்கி சுமக்க
ஆடம்பரத்தைக் காட்டி
ஆரவாரத்தைக் கூட்டி
ஆயிரம் வாலாக்களையும்
அணுகுண்டையும்
ஆனை வெடிகளையும் வீசி
பச்சிளங்குழந்தையை அலற வைத்து
பாட்டன் பாட்டிகளை பதற வைத்து
நோயாளிகளை நடுங்க வைத்து
பட்சிகளை ஒடுங்க வைத்து
மாக்களை தெறித்து ஓட விட்டு
மக்களை அடிமனதை எரித்து விட்டு
அழகான பூமிப் பந்தை
மயானக் காடாய் சுடலையாக்கி
எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி
தற்காலிக மகிழ்ச்சிக்காக
தீபாவளி நிகழ்ச்சிக்காக
மத்தாப்பு எனும் பெயரில்
மனிதா நீ வைக்கும் ஆப்பு
எதிர்காலத்தில் உனைத்
தாக்கும் அம்பு!
அதை நாளும் நம்பு!
வாங்கி விடாதே வம்பு!
ஆரோக்கியமான சூழலே
உனக்கு நாளும் தெம்பு!
அமைதியான சூழலில்
அழகான தீப ஒளியில்
இனிப்புகளை சுவைத்து
இன்பங்களில் திளைத்து
புத்தாடை தரித்து
புதுயுகம் படைத்து
புது யாகம் நடத்து
மத்தாப்பின்றி தீபாவளி சாத்தியம்!
வளியின்றி வாழ்வு சாத்தியமா?
முத்தாய்ப்பாய் உயிர்வளி காக்க
உயிர்க்கோளம் காக்க
அறிவொளி கொண்டு தீபச்சுடரொளி ஏந்து!
புலர்கின்ற தீப ஒளித் திருநாள்
உங்கள் உள்ளங்களை மட்டுமல்ல
இல்லங்களையும் நிறைக்கட்டும்
இருள் நீங்கி இன்பங்கள் நிலைக்கட்டும்!
தீபாவளி நல்வாழ்த்துகள்!
வாழ்க வளத்துடன்!
வாழ்க நலத்துடன்!
💐💐💐💐💐🙏🙏🙏🤝🤝🤝🤝