நொறுக்காதே அவளை!
நொறுக்காதே அவளை!
ஒரு பெண்ணின் ஒழுக்கத்திற்கு அவளது உரிமையைப் பறிக்கும் அளவு சக்தி உள்ளதா?
ஒரு பெண் எந்த அளவு ஒழுக்கம் வாய்ந்தவள் என்பதை இறைவனும் அதற்கு அடுத்ததாக அவளோடு சகவாசம் கொண்டு முழுதுமாக அவளுடன் வாழ்பவர்களுக்கு சில வேளை கணிக்க முடியும்.ஆனால், அதே பெண் தனது உரிமைகளுக்காகப் பேசும் போது ஒழுக்கம் கெட்டவளாக சித்தரிப்பது மடமைத்தனத்தின் உச்ச கட்டம் என்பதே உண்மையாகும்.
எவ்வளவுதான் பெண்களுக்கு இறைவன் உரிமைகளை வழங்கி இருந்தாலும் என்றோ ஒரு இடத்தில் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவளை மட்டம் தட்டும் ஒரு பெரிய கூட்டம் இன்றளவு வரை இருந்துகொண்டே இருக்கிறது.
இது அந்தளவு தூரம் பாரதூரமாக சிந்தித்து கதைக்கப்படாத தலைப்பாக இருப்பதற்கும் காரணம் உண்டு.பொதுவாக பெண்களது உரிமைகளையும்,தேவைப்பாடுககள் பற்றியும் பேசுபவர்களை எக்ஸ்ட்ரீம் பெண்ணியவாதிகளாக சித்தரிக்கும் சமூகமாக இருப்பதுவே அது.
அன்றாட வாழ்க்கையில் ஆண் பெண் வேறுபாடின்றி பல பொதுவான சிக்கல்கள் இருக்கும்.அதே, குறித்த சிக்கலைத் தீர்ப்பதற்கு அந்த இடத்தில் சிக்கல் தான் குறித்த நிலைமையில் பொது நோக்காக இருக்க வேண்டும்.மாறாக அங்கு பால்நிலை தாக்கம் செலுத்தக் கூடாது.
அதாவது, குறித்த பிரச்சினையானது பால்நிலைக்குள் நின்று பேச வேண்டியதாயின் இறைவன் வழிகாட்டிய அளவு உரிமைகளை வழங்கவும் பெறவும் இரு தரப்பும் தலைப்பட வேண்டும்.அது அவ்வாறு அன்றி இல்லாமல் பொதுப் பிரச்சினையாக இருக்கும் போது பெண் தரப்பு ஆண் தரப்புடனோ அல்லது பெண் தரப்பு பெண் தரப்புடன் முரண்படும் போதோ குறித்த விரிசல் தொடர்பிலான தலைப்பு எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு பெண் என்ற காரணத்தை முன் வைத்து அதனை ஒழுக்கத்துடன் இணைக்கக் கூடாது.
ஏனெனில்,தனது உரிமைக்காகப் பேசுவது ஒழுக்கக் குறைவானதெனில் பெண்களுக்கு உரிமையை வழங்கிய இறைவனை விட அதிகாரத்தைக் கையிலெடுப்பவர்களே ஒழுக்கமற்றவர்களாவர்.
ஒரு பெண் பேசுவதற்கு முறையுண்டு,அதாவது குழப்பிக்கொள்ளக் கூடாது.அதாவது,அவள் தன் உரிமையைப் பேச வாய் திறக்கும் போது குறிப்பாக குழம்பவே கூடாது,அவள் தரப்பு நியாயங்கள் ஒழுக்கத்தின் தலைப்புக்குள்ளால் அடித்து நொறுக்கப்பட்டுவிடக் கூடாது.
அறிவினால் பின்பற்றிய நடத்தைப் பண்பானது ஒழுங்காய் அமையும் போது மட்டுமே கூடவே வரும் அனுபவத்திற்கு அர்த்தமும் மதிப்பும் உண்டு.எப்போதுமே ஒரு பெண் ஒழுக்கமாய் இருத்தல் வேண்டும்.அது, அவள் எப்போதெல்லாம் அடங்கிப் போகிறாளோ அப்போதுதான் ஒழுக்கமுடையவள் என்று அர்த்தமாகாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
உரிமை எனும் போது இறைவனால் அவளுக்கு ஆகுமாக்கப்படாத ஒன்றை ஒரு பெண் பெறுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் முனைவது கூடாது என்பதை மறுதளிக்க முடியாதென்பது போலவே இறைவனால் அவளுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை அவள் பெறுவதை எவரும் தடுக்க முனையக்கூடாது என்பதையும் இந்த சமூகம் நினைவிற்கொள்தல் வேண்டும்.
இங்கு அவளது உரிமையை எதிர்க்கும் காரணி ஆண்கள் மட்டுமே அல்ல சில பெண்களும் கூட பெண் எனும் காரணத்தை அடிப்படையாக வைத்து அவளது ஒழுக்கத்தை குறைத்து மதிப்பிட யுத்தமே செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆணோ,பெண்ணோ இறைவன் அனுமதித்தவற்றை வைத்து அவளை ஒழுக்கத்தின் பெயரால் தீண்டுவதை விட்டும் அஞ்சிக்கொள்ள வேண்டும்.
ஆணோ பெண்ணோ தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட கடமைகளை வலுவாமல் நடந்து கொள்ளுதல் எனும் சட்டகத்துற்குள்ளேயே ஒழுக்கம் உள்ளடக்கப்படுகிறது,ஆக,எங்கு அதன் முறைகள் பேணப்படுமோ அங்கு ஒழுக்கம் ஓங்குகிறது.எல்லா வகையான தலைப்பும் ஒழுக்கம் சார்ந்து பார்க்கும் போது நியாயங்கள் அநியாயத்தை வெற்றி பெற உதவிடுவதாக அமைந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
இமோஷன் என்ற வரைபானது துல்லியமாகப் பார்க்கப்பட முடியாது.அது ஆட்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது.அதற்குள்ளும் பால்நிலை திணிக்கப்பட முடியாது.ஏனெனில், பிரச்சினையின் ஆழ அகலத்தைப் பொறுத்து அது பாரிய விலகல் தன்மையையும் விரிசல் தன்மையையும் உண்டுபண்ணக்கூடியது.
எல்லா சந்தர்ப்பங்களும் வெறுமனே வாயால் மட்டுமே பேசுவதற்கானதல்ல.சில சந்தர்ப்பங்களுண்டு அதற்கு மூளையும் தேவைப்படும் என்பதை ஒப்புவிக்கின்றது.இன்னும் பல சந்தர்ப்பங்களுண்டு,அதற்கு இதயமும் கூடவே அவசியப்படுகின்றது.இவற்றை எல்லாம் உணர்வதற்கு மனிதம் கொண்ட மனிதனுக்கு மட்டுமே முடியும்.
ஆக,பிரச்சினையைப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் முதிர்ச்சியுற்ற மனப்பக்குவம் எம் சமூகத்திற்கு மிக மிக அவசியமாகிறது.அதேவேளை,சலித்துப் பார்க்கும் போது பெருஞ் சிறு கற்களுக்குள்ளே ஒரு இரத்தினம் அத்தனை வலிகளையும் மறக்கடிக்க முனையும் பொருட்டு சில மனித உள்ளங்களும் பால் நிலை கடந்து உரத்துச் சொல்லும் உண்மைக்கு உத்வேகமளித்துக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
இது எக்ஸ்ட்ரீம் பெண்ணியம் பேசும் கட்டுரை என நினைப்பவர்களுக்கு :புரியும் வரை நிதானமாக வாசியுங்கள்!
—