தீபாவளி
தீபாவளி
அன்று தீபாவளி திருநாள். ஊரே ஒளிமயமாக காட்சியளித்தது. ராமுவின் தாயாரும் சோமுவின் தாயாரும் தங்களுடைய இல்லங்களில் வண்ண கோலமிட்டு விளக்குகள் ஏற்றி வைத்தனர். சிறுவர்களான ராமுவும் சோமுவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர்கள்.
இருவரும் விடியற்காலையில் எழுந்து எண்ணைய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பெரியவர்களை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு விட்டு "பட்டாசு வெடிக்க போகலாமா " என்று கத்திக்கொண்டு இருவரும் பட்டாசு வெடிக்க வெளியில் சென்றனர்.
ராமு பட்டாசுகளை எடுத்து வெளியே வைத்து விட்டு ஓடிச் சென்று ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டான். அவனுடைய பெற்றோரையும் துணையாக அழைத்துக் கொண்டான்.
சோமுவோ வெறும் பட்டாசை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடத் தொடங்கினான்.
ராமு சோமுவைப் பார்த்து "தனியாகவா விடுகிறாய் பார்த்து பத்திரம் பெரியவர் யாரையேனும் அருகில் அழைத்துக் கொள்" என்றான்.
சோமுவோ அலட்சியமாக "ஒன்றும் ஆகாதுடா" என்று கூறி விட்டு பட்டாசை வைக்க ஆரம்பித்தான்.
இருவரும் மகிழ்ச்சியாக விட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து 'ஆ' என்ற அலறல் சத்தம். சோமுவிடமிருந்து தான். புஸ்வாணம் ஒன்று வெடித்து அவனுடைய துணியில் பட்டு அவன் உடம்பிலும் பட்டு விட்டதால் எரிச்சல் தாங்காது அலறினான். ராமுவின் அப்பா உடனே ஒடிச் சென்று காயம் பட்ட இடத்தில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கழித்து ராமு கொண்டு வந்த மருந்தையும் தடவினார். அதற்குள் சோமுவின் குரல் கேட்டு அவனுடைய பெற்றோரும் வெளியே ஒடி வந்தனர். நடந்ததை அறிந்து ராமுவிற்கும் அவனுடைய தந்தைக்கும் நன்றி கூறினர்.
சோமுவும் அவனுடைய பெற்றோரும் அவர்களுடைய அஜாக்கிரதைக்காக வருந்தினர்.
என்ன நண்பர்களே நாமும் ராமுவைப் போல் விழிப்புடன் கொண்டாடுவோமா
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.