இரத்த சரித்திரம்
இரத்த சரித்திரம்
என் இதயத்தில் நுழைந்து, உயிரிலே கலந்து
என் இதயத்துடிப்பாய் நீ மாறிட
உன் முகம் காணாமல் விழி பாராமல்
உன்னிடம் நான் காதல் கொண்டிட
வஞ்சகமாய் நுழைந்து , உயிரை குடித்து
நம்மை பிரித்திட காத்திருக்கும் நரிகளின் கூட்டமும்
மிஞ்சிடும் நடிப்பினில், போலியான அன்பினால்
நம்மை சிதைத்திட துடிக்கும் ஓநாய்களின் கூட்டமும்
உயிரில் கலந்த உனக்கு இனியதொரு உணவளிக்க
உதிரமதை திரித்து பாலாய் நான் கொடுத்திட
பாசகயிரால் உன்னை வதைத்திடும்
சதியின் வலையில் மீன்களாய் நாம் துடித்திட
நெஞ்சமதில் சிறிதும் ஈரமில்லாமல்
நம்மை பிரித்திட காத்திருக்கும் கழுகுகள்
நஞ்சுதனை விதைத்தனரே என் தேகத்தில்,
இமைக்கும் நொடியில் செயலிழந்த உன் உறுப்புகள்
கதிரவனை காணாத விழிகளும்,
சுமந்தவள் தாலாட்டை கேட்டிராத செவிகளும்,
தந்தையை பற்றிடாத உன் விரல்களும்,
நிலத்தினை தீண்டிடாத உன் கால்களும்,
தென்றலதை உணர்ந்திடாத உன் தேகமும்
பிறந்தவுடன் கதறிடாத உன் குரலும்,
இனி கிடைத்திடுமோ உன் போன்ற ஒரு உயிர்
என்று கதறிடும் தாயின் ஓலம்
கேட்டும் இறங்கவில்லையோ இம்
மூடர்களின் ஆண் வாரிசு மோகம்
தொடங்கும் முன்னரே முடித்தனரோ
சகாப்தம் ஆகும் உன் வாழ்வை
இனியும் வேறு பெண் சிசு எழுதிட வேண்டுமோ
உன் போன்ற சரித்திரத்தை.
-ஒரு பெண் குழந்தையின் இரத்தத்தால் எழுதப்பட்ட சரித்திரம்