கேள்வி கேள்வியா?
கேள்வி கேள்வியா?
கேள்விகளின் நோக்கமும்,
கேட்பவரின் தரமும்,
தேவையும் அறியாது
எல்லா கேள்விகளுக்கும்
பதில் சொல்ல முனைதல்..
அறிவுக்கு அழகன்று..
அறிவின் தேவைக்கும்
மனதின் அறிதலுக்கும்
நிறைவான புரிதலுக்கும்
ஐயத்தின் தெளிவுக்கும்..
அறிவார்ந்தோர்
எழுப்பிடும் அர்த்தமுள்ள
தரமான கேள்விகள் மட்டுமே
பதிலளிக்க உகந்தவை..
பதிலில்லை என்பதை
நன்றாக அறிந்திருந்தும்..
ஏளனம் செய்யும் பொருட்டும்..
தன்னை முன்னிறுத்தி
பிறரின் கவனத்தை
ஈர்க்கும் வகையிலும்..
செருக்கேறிய கறைபடிந்த
புரையோடிய எண்ணத்தோடும்..
ஊனமான மனதினோர்
உள்ளத்தில் எழுந்து
அரங்கிலோ தனிமையிலோ
அறிவிலிகள் எழுப்பிடும்..
தரமற்ற கேள்விகளால்
யாருக்கு என்ன பயன்??
பதிலளிக்க தகுதியுள்ள
தரமான கேள்விகளை
ஆர்வமுடன் எதிர்கொண்டு
தெரிந்தால் பதிலளிப்போம்..
இல்லையெனில்
தேடித் தெளிவுறுவோம்..
ஏளனம் செய்யும் பொருட்டு
எதிர்முனையில் தொடுக்கும்
தொடர் கேள்விகளை
எதிர்கொண்டு பதிலளிக்க
முனைந்து மனமுடைந்து
போவதை விடவும்
அமைதியாகவும்
பொறுமையாகவும்
கடந்து போதலே
அறிவிற்கு அழகாகும்...
இரா.பெரியசாமி