மலர்கள்
மலர்கள்
மலர்ந்த மலர்கள்
காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலை தொட்டு கும்பிட்டு
காலனும் ஓடிப் போவானே என
கவிமணி அன்று பாடியது எண்ணி
காலை உலா செல்ல நடந்தேன்.
கண்கவர் மலர்கள் அங்கே
காற்றில் அசைந்து சிரித்திட
கண்டேன் அனைத்து மலர்களையும் .
கொத்து கொத்தான நந்தியாவட்டை
கண்கவர் தங்க அரளியுடன் செவ்வரளி ,
கலர் கலராய் பூத்த பொகைன்விலா பூக்கள்
கண்கவர, மனம் மகிழ, வீடு திரும்பினேன்.
மாலை நேரம் வந்தது.
மறந்து விடாமல் உலா செல்ல
காலை மலர்ந்த மலர்கள் அனைத்தும்
மண்ணில் வீழ்ந்து கிடந்தனவே!
மலர்களைக் கொய்யா தீர்கள் என
மனிதனுக்குத் தான் கட்டளையோ ?
மறந்தனரே இயற்கையை !
மண்ணில் உதிரத்தானோ இம்மலர்கள்.
மனம் கணக்க திரும்பி வந்தேன்.
உதிர்ந்த மலர்கள் உரைத்த உரை
உறங்குவது போலும் சாக்காடு
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
என உரைத்தான் பொய்யாமொழிப்புலவன் .
இரவில் இறந்து விடியலில் பிறந்து
காலை நடைபழக மீண்டும் வந்தேன் .
புதிதாய் மலர்ந்த மலர்களும்
காற்றில் மனம் பரப்பி மனதை நிரப்ப
காலடியில் பட்ட உதிரிப் பூக்களையும்
உற்று சிறிது நேரம் நோக்கினேன்.
இறுதி நேரம் என்றாலும் அப்பூக்கள்
உறுதியாக உரைத்தன இம்மொழிகள்.
" கைவிரித்து வந்தேன்; கைவிரித்தே சென்றேன்."
என்றான் உங்களின் ஓர் மாவீரன் .
இன்று இருப்பார் நாளை இல்லை எனும்
பெருமை கொண்டது உங்கள் இனம் .
எங்களையும் உங்களைப் போல்
எண்ணினீரோ ? மனித பதர்களே!
வண்ணம் கொண்டு பிறந்து வந்தோம் நாங்கள்;
வண்டின் தேன் கொண்டு வந்தோம் நாங்கள் ;
மணம் பரப்பி வந்தோம் நாங்கள் ;
மகரந்தம் கொண்டு வந்தோம் நாங்கள்.
கொண்டு வந்த அனைத்தையும் கொள்ளை அடிக்காமல்
தன்னலம் கொண்டு தானே கொள்ளாமல்
அவரவர் சொத்தை அவரவரிடமே சேர்ப்பித்து
கணநேரம் வாழ்ந்தாலும்
கர்மத்தை நிறைவு செய்து
மாலை நேரம் உதிர்ந்தாலும்
மண்மூடிப்போனோம் என்று
நினைத்தாயோ எம்மை ?
மண்ணோடு மண் கலந்து
வேர்நுனி நுழைந்து
தன் கடன் முடிக்க
மலர்ந்தோம் மறுபடியும் இவ்வுலகில்.