மாணவனை மிரட்டி
மாணவனை மிரட்டி
மாணவனை மிரட்டி பணம் பறிப்பு..! - கோவையில் சர்ச்சை `சஸ்பெண்டு’ காவலர் மீண்டும் கைது
மனைவியைத் தாக்கி சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்த கோவை போலீஸ், மாணவனை மிரட்டி பணம் பறித்த புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை, கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த அய்யலு கணேஷ். இவர் போத்தனூரில் போக்குவரத்து போலீஸாகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி ஶ்ரீஜா, இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணேஷ், ஶ்ரீஜா காதல் திருமணம் செய்த நிலையில், நாளடைவில் ஶ்ரீஜாவின் நடத்தை மீது கணேஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டிருந்ததால், ஶ்ரீஜா தன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.ஆத்திரமடைந்து தன் மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் மாமியாரை அய்யலு கணேஷ் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து, காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அய்யலு கணேஷ் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும், பணியில் இருந்தும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார். இதனிடையே, சிறையில் இருந்து ரிலீஸான கணேஷ் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கஞ்சா விற்பதாகக் கூறி மாணவனை மிரட்டி பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிடில் கைது செய்துவிடுவேன் என்று கூறி கணேஷ் தொடர்ந்து மிரட்டியிருக்கிறார். இதுதொடர்பாகக் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.இதையடுத்து, அய்யலு கணேஷை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிவானந்தம், சலீம் பாஷா, ஜெய்லாபுதீன், சதீஸ்குமார், நவாஷ், அப்சர் அலி என்பவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “கல்லூரி மாணவன் ஒருவன் கஞ்சா பயன்படுத்துவதை அய்யலு கணேஷ் தரப்பில் வீடியோ எடுத்துவிட்டனர். வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று ரூ.50,000 கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால், அந்த மாணவன் ரூ.43,000 கொடுத்துள்ளான். இதையடுத்து, அந்த மாணவனைக் கடத்தி மேலும் ரூ.2,00,000 கேட்டுள்ளனர். அதனால், அந்த மாணவன் அவர்களுக்கு மேலும் ரூ.38,000 கொடுத்திருக்கிறான்.அதன் பிறகும் அவர்கள் தொடர்ந்து அந்த மாணவனுக்கு டார்ச்சர் கொடுத்துள்ளனர். அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் சம்பந்தப்பட்ட மாணவன் காவல்நிலையத்தில் புகாரளித்தான். அதன் அடிப்படையில் அய்யலு கணேஷ் உட்பட 7 பேரை கைது செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேலும் 3 பேரை தேடி வருகிறோம்” என்றனர்.