தியாகு
தியாகு
தியாகு எப்போதும் செல்வியோடே சுற்றி திரிவான். அவளுக்கு ஏழு வயது. அவன் வயது அவளுக்கு தெரியாது.. தெரிந்துகொள்ளவும் அவள் நினைக்கவில்லை.
தியாகுவை நாய் என்று யாரவது சொன்னால் செல்விக்கு பிஞ்சு மூக்குமேலே கோவம் வரும்.
அவன் நாய் இல்லை.. என் தியாகு...
அவசர அவரமாக இரண்டு இட்லியை செல்வி வாய்க்குள் திணித்து கொண்டு இரண்டு இட்லியை தியாகு தட்டில் வைப்பாள்.அவனுக்கு வைக்காமல் ஒருநாளும் செல்வி சாப்பிட்டதில்லை.
கையிலே கூடையும், முதுகிலே ஒரு பையுமாய் செல்வி பள்ளிக்கூடத்திற்கு நடக்க.. தியாகு அவள் காலோரம் உரசி கொண்டே நடப்பான்.அவளுக்கு அந்த ஸ்பரிசம் பிடிக்கும்.
அந்த பள்ளியில் தியாகுவை கேள்வி கேட்பார் யாரும் இல்லை. வகுப்பறை வரை வந்து வழி அனுப்பிவிட்டு செல்வான் தியாகு.
சமத்தா வீட்டுக்கு போணும்.. என்ன புரியுதா..தியாகு நெற்றியில் முத்தமிடுவாள்.. தியாகு நெகிழ்ச்சியில் திளைப்பான்.
செல்வி வகுப்பறைக்குள் சென்று அமரும் வரை வாசலிலே நின்று பார்ப்பான். அவன் மீது பள்ளி குழந்தைகள் காகிதத்தை வீசுவார்கள். தியாகு அதை பற்றி கவலைபடாமல் இங்கும் அங்குமாய் துள்ளி குதிப்பான் செல்வி மீது பார்வையை செலுத்திக்கொண்டே.
டங்.டங். டங்ங்..என்று பள்ளி உணவு மணி அடிக்க.. எங்கிருந்தாலும் ஓடி வருவான் வலட்டிக்கொண்டு.
செல்வி தன் கூட்டாளியுடன் அமர்ந்து சாப்பிட.. அவள் தோளில் தலை வைத்திருப்பான் தியாகு . ஆளுக்கு ஒரு வாயாக பழைய சோறும் கருவாடும் உண்பார்கள்.
தியாகு தெரு நாய்களோடு சண்டையிடமாட்டான்.செல்விக்கு சண்டை பிடிக்காது. அவனுக்கு என்று பள்ளியில் என்றோ நட்ட ஆலமரஅடியில் அவளுக்காக காத்திருப்பான்.
ஒரெண்டு ரெண்டு.. ரெண்டு ரெண்டு நாலு.. தியாகு காதிலும் விழும். தலையை தூக்கி பார்த்து விட்டு மீண்டும் கால் இடிக்கில் தலையை வைத்து கொள்வான்.
மணி அடிக்கும் இடத்தில் நாலு மணிக்கு வந்து நிற்பான்.
தியாகு வந்த பிறகுதான் மணி அடிக்கும் சுந்தரம் சோம்பளோடு வருவான்.
ஹே…என்ற கூச்சலும் சந்தோஷமுமாக குழந்தைகள் ஓடி வர.. தியாகு தனக்கு சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தில் மிதப்பான்.
செல்வி கூட்டத்தில் எங்கு இருந்தாலும் அவளோடு சேர்ந்து அவனும் மாணவனோடு மாணவனாக துள்ளி குதித்து ஓடுவான்
ரேஷன் அட்டையிலும், வகுப்பு பதிவேட்டிலும் மட்டும் தான் தியாகு பெயர் இல்லை மற்றபடி அவன் குடும்பத்தில் ஒருவன், பள்ளியிலும் ஒருவன்