மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா!(அத்தியாயம் 4)
மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா!(அத்தியாயம் 4)
அத்தியாயம் 4
சுதந்திர இந்தியாவின் பங்களா!
வேட்டிக்குச் சென்ற தன் காதலன் தாமஸ் திரும்பவில்லை என்ற செய்தி ஏஞ்சலாவிற்கு எட்டியது.அன்று இரவு வழக்கம்போல் சாப்பாட்டு மேஜையில் டின்னர் சாப்பிட அனைவரும் அமர்ந்தனர். அப்பொழுது ஏஞ்சலா தன் தந்தையிடம் தாமஸைப் பற்றி கேட்டாள். கோபம் கண்களில் தெறிக்க துரை அவளிடம்,"ஃபர்கெட் ஹிம் ! ஐ நோ எவரிதிங் ." எனக் கத்தவும் ஏஞ்சலா அழுது கொண்டே தன் ரூமுக்கு ஓடினாள். இப்போதுதான் துரைசானிக்கும் விபரம் புரிய ஆரம்பித்தது. தன் காதலனைத் தந்தை கொன்றுவிட்டார் என அவளுக்குப் புரிந்தது. அன்று இரவே அர்த்தராத்திரியில் பால்கனியில் இருந்து கீழே விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். அன்று இரவு அவள் போட்ட அலறல் தான் மலை முழுவதும் எதிரொலித்தது. துரையும்,துரைசானியும் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
மதராசப்பட்டினம் துறைமுகத்தில் அவர்கள் இங்கிலாந்து புறப்பட கப்பல் தயாராக நின்று கொண்டிருக்கும் வேளையில் தங்கள் அழகு மகள் ஏஞ்ஜெலாவின் இழப்பு அவர்களை நிலை குழைய வைத்தது.அழகு தேவதை ஏஞ்சலா ஊட்டியில் உள்ள ஃபெர்ன் ஹில் மலை மேல் அமைந்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டாள். மறுநாளே துரை அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் வரவழைத்து பங்களாவை முறைப்படி அவர்களிடம் ஒப்படைத்தார். அழுதுகொண்டேயிருந்த தன் மனைவி எமிலியை அணைத்துக் கொண்டே தன் காரில் ஏறி அமர்ந்து மதராஸ் நோக்கிப் புறப்பட்டார். மகளை இழந்து எமிலி வேதனையில் துடித்ததால் பங்களாவில் இருந்து எதையும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை. வேலையாட்கள் தான் தாங்களாகவே முன்வந்து அவர்கள் ஆசைப்பட்டு ஏற்கனவே பேக் செய்யச் சொன்ன பெட்டிகளை ஒரு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அழகான வேலைப்பாட்டுடன் கூடிய கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட பங்களாவில் சில மேஜைகள், நாற்காலிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. அதிகாரிகளுக்கு பங்களாவைத் தற்சமயம் பூட்டி வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. கடந்த காலங்களில் ஜெகஜோதியாக விளங்கிய அந்த பங்களா பூட்டப்பட்டு இருண்டு கிடந்தது.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.அரசாங்கம் மாறியது. மலை உச்சி மாடர்ன் பங்களா இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் அங்கே இரவில் அலறல் சத்தம் கேட்டது!
தொடரும் மர்மம்........