மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 9
மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 9
அத்தியாயம் 9
பங்களாவில் ஓர் கன்னிப் பெண்!
மதன்லாலுக்கு ஒரு புதுப் பிரச்சனை உருவாகிவிட்டது. ஆங்கிலேயர்களின் காலத்தில் துரை ஜான்பால் பங்களாவில் இருந்தபோது அங்கே வேலை செய்த சமையல்காரர் ,தோட்டக்காரர், ஒப்புரவுத்தொழிலாளி, பியூன் என்று முக்கிய தொழிலாளர்கள் அங்கேயே தங்குவதற்காக பங்களாவின் தரைத்தளத்தில் பக்கவாட்டில் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு குவாட்டர்ஸ் கட்டி தங்க ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஜான்பால் பங்களாவை முறைப்படி இந்திய அரசிடம் ஒப்படைக்கும் போது தொழிலாளர்களையும் சேர்த்து ஒப்படைத்தார்.ஆனால் அரசாங்கம் மாறினாலும் தங்கள் வேலை மாறாததால் அவர்கள் அங்கேயே தங்கினர்.
அத்தொழிலாளர்களில் சிலர் ரிடையர் ஆன பிறகு வாரிசு அடிப்படையில் தங்கள் வேலைகளை தங்கள் பிள்ளைகளுக்கென வாங்கிக் கொடுத்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். அரசாங்க விதிமுறைகளால் அவர்களுக்கு வெளி வேலை செய்யும் நிலை ஏற்பட்ட போதும் குவார்ட்டசை காலி செய்ய மனம் இல்லாமல் அங்கேயே தங்கி இருந்தனர். அரசாங்கம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. அப்படியும் அவர்கள் காலி செய்யாமல் அங்கேயே தங்கி இருந்தார்கள்.
இத்தொழிலாளர்கள் தான் மதன்லாலுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தினர். ஹோட்டல் தொடங்கிய பின் ஹோட்டலில் வேலை செய்பவர்களைத் தங்க வைக்க அந்த குவாட்டர்ஸைத் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார்கள். ஆனால் அங்கு இருந்தவர்களோ குவாட்டர்ஸைக் காலி செய்ய மறுத்தனர். இந்நிலையில் மழைக்காலம் ஆரம்பித்தது. கட்டிட காண்ட்ராக்டர் பிரசாத் மதன்லாலிடம் மலைக்கு மேல்நோக்கிச் செல்லும் தார் ரோடு தொடர் மழையால் மண்ணரிப்பு ஏற்பட்டு பழுதடையும் நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
மலைப்பாதையை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதன்லால் கேட்க, பொதுவாக ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் மண்ணரிப்பைத் தடுக்க பாதையின் பக்கவாட்டில் கருங்கல் தடுப்புச் சுவர் எழுப்புவது வழக்கம். எனவே பங்களாவின் இரு பக்கமும் பக்கவாட்டில் மலையை ஒட்டி கருங்கல் சுவர் எழுப்பிவிட்டால் பாதை ஸ்ட்ராங்காக அமைந்து விடும் என பிரசாந்த் கூறினார். மதன்லாலுக்கும் இது நல்ல உபாயமாகத் தோன்றவே கருங்கல் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.
இதற்கிடையில் குவார்ட்டர்ஸில் உள்ளவர்கள் ஏதோ ஒரு வக்கீலின் பேச்சைக்கேட்டு மதன்லாலிடம் தங்களுக்குப் பணம் கொடுத்தால் போதும்,குவார்ட்டசை காலி செய்து கொடுத்து விடுவோம் என்று கூற, இதனால் கோபம் கொண்ட மதன்லால் உடனே தன் வக்கீலைத் தேடிப் போனார். வக்கீல் ஹோட்டல் ஆரம்பித்தபின் பிரச்சனை வரவேண்டாமே என்று கூறி கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்றார். தோட்டக்காரரின் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரும் பணம் வாங்கிக்கொண்டு வெளியேறினர்.
தோட்டக்காரருக்கான வீட்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் வேலை பார்த்த தோட்டக்காரர் இறந்தபின் அவரது மகன் அந்த வேலையைப் பார்த்தார். தற்போது பேரன் அந்த வேலையைப் பார்க்கின்றான். மூன்று தலைமுறைகளாக அந்த குவாட்டர்ஷில்தான் வாழ்ந்து வருகின்றனர். பேரனுக்கும் திருமணமாகி மனைவி , மகள் எனக் குடும்பமாக இருந்ததால் மகளின் திருமணம் முடியும் வரை அங்கேயே தங்க நினைத்திருந்தான்; பணம் வாங்க மறுத்தான். இதனால் கோபம் கொண்ட மதன்லால் உன்னை எப்படி வெளியேற்ற வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூறி அனைவரின் முன்னே முன்னே கத்தி விட்டுப் போனார். போலீசில் புகார் செய்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணினார். ஆனால் பேரன் மதன்லால் மீது போலீசில் புகார் கொடுத்தான். ஏன்?எதற்காக ?
மர்மம் தொடரும்...........