வல்லன் (Vallan)

Drama Inspirational

4  

வல்லன் (Vallan)

Drama Inspirational

வேலுநாச்சி 9

வேலுநாச்சி 9

4 mins
656


அத்தியாயம் 11 வெஞ்சின வேங்கை


காளையார் கோயில் சென்று வெளியே வந்த முத்துவடுகநாதரையும் கௌரி நாச்சியாரையும் சுற்றி வளைத்தன பாஞ்சோர் தலைமையிலான வெள்ளைப் படைகள். மன்னருக்கு பொல்லாத சினம், வரம்பு மீறி போர் விதிகளை தகர்த்து ஆயுதம் ஏதும் இல்லாத என்னைத் தாக்க எத்தனிப்பது எத்தகைய கயமைத்தனம். பேச்சுவார்த்தைக்கு அழைத்து இன்று கோழை போல் கொல்ல துணிந்தது எவ்விதம் ஞாயம்? ஏதாகிலும் நேரே போர்க்களத்தில் சந்திப்போம் இப்போது வழியைவிட்டு விலகு... என சிம்மமாக முழங்கினார்.


இவற்றுக்கெல்லாம் ஒரே பதிலாக பாஞ்சோர் தன்‌ அகோர பற்களைக் காட்டி கொக்கரித்தான் அவ்வளவே! 


(பாஞ்சோர் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசியதை எழுத்து நிமித்தம் தமிழிலே கொடுத்துள்ளேன்.)


தேவரே இன்று நீ தனியாக சிக்குவீர் என்றேதான் தீட்டப்பட்டது திட்டம். வெகு நாள் கண்கானிப்புக்குப் பிறகே இன்று நீர் இந்த நிலையில் என் முன் நிற்கின்றீர். இத்தனை சுலபமான வாய்ப்பை நான்‌ எப்படி நழுவவிடுவேன்... விட்டால்தான் நீர் என்னை மீண்டு விட்டுவிடுவீரா? 


குகைக்குள் தலை குடுத்தாயிற்று இனி பின்வாங்கி பயன் இல்லை, நடப்பதை பார்த்துவிடலாம்... அங்கே சிவகங்கை கோட்டையும் எங்கள் வசம் விரைவில் வந்துவிடும். இதற்கு மேல் உங்களுக்கு இந்த பூமியில் எந்த வேலையும் இல்லை. மகிழ்ச்சியாக சென்று வாருங்கள்...


தான் கொடூரச் சிரிப்போடு சிறிதும் எதிர்பாரா நேரத்தில் தான் கைத் துப்பாக்கியை எடுத்து ஒரே அழுத்து , விர்ரென்று வெளியேறிய குண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கௌரி நாச்சியார் மார்பில் பாய்ந்து குருதி குடித்து முதுகின் வழியே வெளியேறியது.


கௌரியை தாங்கிப்பிடித்த தேவர் சுதாரிப்பதற்குள் மீண்டுமொரு குண்டு துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு சீறிப் பாய்ந்தது முத்துவடுகநாதர் விளாவைத் துளைத்துச் சென்றது. 


இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் யாருமற்று இருந்த அந்த காளையார் கோயில் வாசலில் வீழ்ந்துகிடந்தனர். 

பாஞ்சோர் தன் படையை அடுத்து சிவகங்கை நோக்கி நடத்தினான்.

 

இதற்குள் தேவர் இறந்துபட்டச் செய்தி அறிந்து நிலைகொள்ளாமல் தாண்டவராயன் மற்றும் வெள்ளச்சி ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு விரைந்தார் காளையார் கோயில் நோக்கி. 


விரைந்து வந்த வேலுநாச்சியார் கண்ட காட்சி அப்படியே தலையில் இடி இறங்கியது. முழங்கிய சிங்கம் இங்கே நிலையிழந்து இருப்பதென்ன? ஓங்கி நின்ற மலை இங்கே நொறுங்கி கிடப்பதென்ன? ஒய்யாரமாய் அமர்ந்த தேவர் இப்படி ஒடிந்து இங்கே கிடப்பதென்ன? கபடு சூது அறியாத இளையவள் இங்கே சுடுபட்டுக் கிடப்பதென்ன? 


கையிலாய ஈசனே!, காளையார் கோயில் தெய்வமே! உனக்கு கண்‌ இல்லையோ? நடந்த கொடுமை முழுவதும் நீ காணாது எங்கு போனாய்? செய்த பூசைகள் என்ன? இருந்த நோன்புகள் எவ்வளவு? எல்லாமே வீணோ? பதில் சொல்...


என் பூசிய மஞ்சள் இங்கே நிறம் கருகி போயிற்றே! 


என் மன்னன் சூட்டிய மல்லிகை இங்கே வதங்கிப் போயிற்றே! 


     கட்டிய தாலி இங்கே என் கழுத்தில் இருந்து இறங்கிற்றே ! 


நெற்றியில் இட்ட பொட்டும் அது குலைந்து போயிற்றே! 


மன்னன் இல்லா நாடு! தகப்பன் இல்லா பிள்ளை! கணவன் இல்லா மனைவி ! 


ஈசனே? இதுதான் நீ எனக்கு தரும் வரமோ? 


அமைச்சரே மூட்டுங்கள் சிதையை... என் கணவனோடே நானும் போகிறேன்... உடன்பிறந்தவளாய் இருந்த என் தங்கையுடனே நானும் போகிறேன்... இனி என்ன பிடிமானம் இருக்கிறது இந்த உலகிலே? ஆகட்டும் இது என் கட்டளை, மூட்டுங்கள் சிதையை...


இப்படி உணர்ச்சிவசப்பட்டு சந்னதம் வந்தது போல அழுது புரண்டு ஆவேசமாக தன் நிலை மறந்து இருந்தார் வேலுநாச்சியார். 


தாண்டவராயன் பிள்ளை வேலுநாச்சியாரை தேற்றி சிறிது அமைதியடையச் செய்து மெதுவாக பேசலானார்...


தாயே! இது தான் முடிவா? இதைத்தவிர இந்த பூமியில் உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இரண்டு உள்ளது. 


ஒன்று சூழ்ச்சி செய்து நம் மன்னரைக் கொன்ற பாஞ்சோரைக் கொன்று நம் நாட்டை மீட்க வேண்டும்.


இரண்டு, உங்களையே நம்பி இருக்கும் இளவரசி வெள்ளச்சி. இவற்றை எல்லாம் விட்டு நீங்கள் எளிதாய் நானும் சாகிறேன் என்பது கடமைகளில் இருந்து தப்பிக்க ஆயத்தமாக இருப்பது போல சொல்கிறீர்கள். பகை முடித்து, துரோகம் அறுத்து நாட்டை மீட்டால் தான் சிவகங்கை மீதான களங்கம் நீங்கும். 


          மீண்டும் சிவகங்கை சீமையின் இராணியாக வேலுநாச்சியார் முடிசூட வேண்டும். இதுவே என் விருப்பம், ஒரு அமைச்சராக இதைக் கூற வேண்டும் என்பது எனது கடமை. மேலும் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து சொல்கிறேன் நீங்கள் இருந்து அந்த படுபாவிகளை அழித்து நாட்டை மீட்க வேண்டும் அவ்வளவே!


தாண்டவராயன் பிள்ளை பேசியதைக் கேட்ட வேலுநாச்சியார் மௌனத்தில் மூழ்கி நிதானமாக யோசித்துக் கொண்டு இருந்தார். 


சிறிது நேர ஆழ்ந்த யோசனைக்குப் பின் தன் கணவனும் கௌரி நாச்சியாரும் எரிந்து கொண்டிருந்த சிதை முன் நின்று, 


வேலுநாச்சியார் ஆகிய நான், உங்களின் இந்த நிலைக்குக் காரணமான பரங்கியன் பாஞ்சோரை அழித்து மீண்டும் சிவகங்கை சீமையை மீட்டு இராணியாக நான் முடிசூடுவேன்... இது உங்கள் இருவர் மேல் ஆணை... 



Rate this content
Log in

Similar tamil story from Drama