என்னவென்று சொல்ல
என்னவென்று சொல்ல
உலகைத் துறந்து
உறவைத் துறந்து
பொருளைத் துறந்து
காட்டைத் தேடி
குடிலைத் தேடி
நிசப்தங்கள் தரும்
நிம்மதியைத் தேடி
தேடுகின்றவனை
தேடிக் கண்டுபிடிக்கும்
முறை துறவென்று சொன்னால்...
உலகில் உழன்று
உறவில் உண்மை தெளிந்து
பொருளின் அர்த்தம் புரிந்து
இல்லறம் காத்து
நல்லறம் புரிந்து
தாமரை இலைத் தண்ணீராய்
அனுபவங்கள் நுகர்ந்து
மன அமைதியில் நிறைந்து
கரைந்து போவதை
என்னவென்று சொல்ல...?!
உலகம் பிறந்தது
எனக்கென வென்று
தான் தனதென்னும்
மமதையும் கொண்டு
பொருளே இன்பம்
புகழே இன்பம்
பதவியும் இன்பம் உடனிருந்து
குழி பறிப்பதில் இன்பம் என
இன்பம் விழைந்து
துன்பம் நுழைந்து
நிம்மதி குலைந்து
நிகரில்லா வாழ்க்கையை
அனுபவிக்க முடியாமல்
கவலை கண்ணீர் சோகம் சாபம்
முரண் வெறுப்பு பேராசை கடும்பற்றென
பாழும் கிணற்றில் விழுந்து
பரிதவிக்கும் மானுட வாழ்வை
என்னவென்று சொல்ல...?
என்னவென்று சொல்ல...வாழ்க்கை
இப்படியும் செல்ல...
சொல்ல வந்த சொல்லை நானும் சொல்லி
முடித்தேனா... இல்லை...இதை
என்னவென்று சொல்ல...?!
நன்றியுடன்...MK🕊️🎶🎉