வீட்டிற்குள் என்ன நடக்கிறது
வீட்டிற்குள் என்ன நடக்கிறது
வீட்டிற்குள் என்ன நடக்கிறது
சிவனுக்கு, அந்த வீட்டை கடந்து செல்லும் போது மனதிற்குள் பயம் தோன்றும்.அவன் கண்ட காட்சி அப்படி.
தினமும் அவன்அதிகாலை நடை பயிற்சி செய்ய அந்த வீட்டின் வழியாக செல்வது வழக்கம்.
அப்படி ஒரு நாள் செல்லும் போது அந்த வீட்டை நெருங்கிய போது,அண்ணா என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.அவன் நின்று திரும்பி பார்க்க,பின்னாடி யாருமில்லை.சத்தம் எங்கிருந்து வந்தது என்று சுற்றுமுற்றும் பார்க்க,அந்த வீட்டின் ஜன்னலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.
உடனே நின்று என்னம்மா என்று கேட்டதும் ஒன்றுமில்லை அண்ணா என்று பதில் வந்தது,அப்புறம் அந்த முகத்தையும் காணவில்லை.
தினமும் இது நடந்து கொண்டு இருந்தது.இந்த அனுபவம் தனக்கு மட்டும் தானா என்று பரிசோதிக்க,சற்று தூரத்தில் நின்று கொண்டு அந்த வீட்டை கடந்து செல்பவர்களை கவனித்தான்.அவர்களை யாரும் கூப்பிட்ட மாதிரி தெரியவில்லை.
அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று பலரும் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறான்.தனக்கு மட்டும் ஏன் இந்த அனுபவம்.அந்த வீட்டிற்குள் சென்று பார்க்கலாமா என்று நினைத்த போது,கேட்டில் பெரிய பூட்டு தொங்கியது.சுற்று சுவர் உயரம் குறைவு,சில பக்கம் இடிந்து கூட கிடந்தது.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொன்ன போது,அது பாழடைந்த வீடு, பேய் இருந்தாலும் இருக்கலாம்.ஆனால் இருட்டில் மட்டும் தான் வெளியில் வரும் என்று ஆளாளுக்கு கற்பனை செய்து பேசினார்கள்.
சிவனுக்கு அதை கண்டு பிடிக்க வேண்டும்,ஆனால் துணைக்கு யாராவது இருந்தால் பரவாயில்லை என்று யாரை கூப்பிட்டாலும் யாரும் வருவதாக தெரியவில்லை.
ஒரு நாள் காலை அந்த வீட்டின் வழியாக சென்ற போது,அண்ணா என்று கூப்பிடும் சத்தம்.உள்ளே எப்போதும் போல ஒரு பெண்ணின் முகம்.சிவன் உடனே சுற்று சுவரை ஏரி குதித்து உள்ளே சென்றான்.
அருகில் செல்வதற்கு முன்பு,அந்த முகம் மறைந்து விட்டது.
ஆனால் அந்த ஜன்னல் திறந்து இருந்தது.அது வழியாக எட்டி பார்த்தவனுக்கு திடுகென்று இருந்தது.
உள்ளே அடுப்பு ஒன்று எரிந்து கொண்டு இருந்தது.பாத்திரத்தில் ஏதோ வெந்து கொண்டு இருந்தது.
ஒரு பெண் அடுப்பு அருகில் அமர்ந்து கொண்டு இருந்தாள்.ஏம்மா என்று கூப்பிட,அந்த பெண் திரும்பி பார்க்க,அவள் முகம் ராட்சஸி மாதிரி இருந்தது.
இவன் ஐயோ என்று கத்தி விட்டான்.
தப்பித்தால் போதும் என்று ஓடி,நேராக காவல் நிலையம் சென்று தான் கண்ட காட்சியை சொல்லி ஒரு காவலரை அழைத்து வர,உள்ளே சென்று பிரதான வாசலில் நிற்க,உள்ளே ஒரே சத்தம்,கதவை தட்டி கேட்க,ஒரு வாலிபன் வந்து கதவை திறக்க,உள்ளே என்ன நடக்குது,ஒரே மர்மமாக இருக்கு என்று புகார் வந்துள்ளது என்று காவலர் கேட்க,அங்கு பத்து நாட்களாக,ஒரு சின்னத்திரை படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கதாநாயகி தினமும் ஜன்னல் வழியாக ரோட்டில் போகும் ஏதாவது நபரை கூப்பிட்டு கலாட்டா செய்து கொண்டு இருப்பது தெரிந்தது.
சிவன் எட்டிப்பார்க்கும் போது படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது தெரிய வந்தது.மாயா மோகினி எனும் சின்ன திரை படப்பிடிப்பு என்று சொன்னார்கள்.
கான்ஸ்டபிள் காவல் நிலையத்திற்கு சொல்ல,படப்பிடிப்பு குழு,காவல்துறை அனுமதி பெற்று தான் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள் என்று தகவல் தர,சிவனை பார்த்து,விவரத்தை சொல்லி பத்திரமாக அனுப்பி வைத்தார்.
சிவனுக்கு இன்னும் பயமும் போகவில்லை.அந்த வீட்டில் என்னவோ நடக்குது என்று மட்டும் உறுதியாக நம்பிக்கொண்டு தினமும் அந்த வீட்டை கடந்து செல்வான்.